Pages

நான்

'நீங்க மட்டும் என்ன..... வாங்க ஒரு 'எட்டு' வந்துட்டு போங்கனு' மணிகண்டன் கூப்பிட மாதிரி, டெல்பின் மேடம் மற்றும் துளசி டீச்சர்ம் கூப்பிட .... [இவுங்க கூப்பிடலனாலும்..... கேக்காமலேயே உதவி பண்றது நம்மகிட்ட இருக்கிற "எட்டுல" ஒண்ணு..ஹி..ஹி.......;) ]

வேலையின் காரணமாக வலைப்பூ பக்கம் அதிகம் வர முடியலை..! [யாரோட சாபம்னு தெரியலை...;( ]

'ம்ம்..எட்டு (மட்டும்)தானா?னு' யோசிச்சா......அடக்கடவுளே... நினைவிற்கு ஒண்ணுகூட வர மாட்டேங்குது. சரி.. 'என்னைப்பத்தி ஒரு எட்டு (நல்ல) விசயம் சொல்லுங்க'னு மனைவிகிட்ட இல்ல நண்பர்கள்கிட்ட கேக்கலாம்னா... இதான் சாக்குனு விபரிதாம 'உண்மை'ய சொல்லிடுவாங்கனு அந்த யோசனையும் கைவிட்ட நிலையில்.....எனக்கு தோன்றியது.

ஒரு முறை சென்னை விமானநிலையத்தில் என்னுடைய பெட்டிகளை தனியா சோதனைபோடனும் தள்ளிக்கிட்டு போயிட்டாங்க... அவுங்க 'எதிர்பார்த்த' ஒண்ணும் கிடைக்கலைனு நினைக்கிறேன்.... ஆனா...என்னுடைய மடிகணினியை பார்த்துட்டு 'ஓ...இது ரொம்ப புதுசு.....சரி... இதுக்கு நீங்க வரி கட்டணும்' சொல்ல 'இல்லங்க... மறுபடியும் போறப்ப நான் எடுத்துட்டு போயிடுவேன்'னு எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன்....
கடைசியா, 'சரி 10,000 ரூபாய் வேணாம்... 3,000 குடுத்துட்டு போங்க'னு சொல்ல... பெரிய புத்திசாலிதனமா 'அப்ப நீங்க அதுக்கு receipt குடுக்கணும்'னு கேக்க... அதற்கு அந்த அதிகாரி, 'receipt வேணும்னா... 10,000 ரூபாய்! அந்த bank counterல போய் கட்டு...இல்லனா... எங்ககிட்ட 3,000 ரூபாய் குடுத்துடு கிளம்பு'னு சொல்லிட்டு போயிட்டாரு.

சிறிது யோசனைக்குபிறகு, 'சரி... நான் bank counterல கட்டிக்கிறேன்' சொல்லிட்டு அப்புறம் "receipt" வாங்கிட்டுதான் வந்தேன்... அந்த அதிகாரி பார்த்த பார்வை, பேசிய விதம்.... ம்ம்.. அனுபவித்தவர்களுக்குதான் தெரியும்..

ஆனால்... அன்று என்னிடம் எனக்கு பிடித்தது... ..அந்த "கொஞ்ச" நேர்மை!

எதைப்பற்றியும் அதிகம் கவலைப்படுவது கிடையாது. குழந்தைகள் வந்தபின் இது உண்மையல்ல என்று தோன்றுகிறது...... ஆனால், 'எது நடந்தாலும் எல்லாம் அவன் செயல்' என்ற எண்ணம் ஒரு காரணமாக இருக்கலாம்.... கவலைப்பட்டால் பிரச்சனையில் ஒரு சதவீதமாவது குறையும் என்றால் கவலைப்படுவதில் அர்த்தம் இருக்கிறது. அப்படி இல்லாத பொழுது.........!!?

யாரிடமும் தேவையில்லாமல் பேசுவதும் இல்லை.... எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரிவதும் இல்லை... ஒருவிதம் கூச்சம்னு சொல்லலாம..?! சில நேரங்களில் 'தமாசாக' பேச போக அது அதே அலைவரிசையில் மற்றவர்கள் புரிந்துகொள்ளாமல்..... மீண்டும் என்னுடைய 'அமைதி'க்கே திரும்பி விடுவது.

சினிமா பார்ப்பது.... ஒருமுறை நண்பர்களுடன் படத்திற்கு போக... மம்மூட்டி நடிப்பில் உருகி... படம் முடிந்தவுடன் தனியா உக்காந்து அழ...... நண்பர்கள் தேற்றி.... வீட்டிற்கு கூட்டி வந்தது மறக்க முடியாது...... சில படங்களை பார்க்கும்பொழுது இன்னும் அதே நிலைதான்...... :(

நம்மால் யாருக்கும் தொந்தரவு வரக்கூடாது என்று எண்ணம். அதன் விளைவு யாரிடமும் உதவி கேக்க தயங்குவது...

அந்தந்த கணத்தை இரசிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாமல் இருப்பது... அதற்காக முயற்சி செய்து கொண்டிருப்பது....

புன்னகை....

கடைசியாக ... கல்லூரியில் கிடைத்த இரண்டு மூன்று பேர்தான் என்றாலும்... அவர்கள் என்னுடைய ஆத்மார்த்தமான (பழைய) நண்பர்கள் மற்றும் இங்கே கிடைத்த புதிய நட்பும்....

கடைசியா வந்துட்டு யாரை அழைப்பது....

1. புதுசா வந்திருக்கிற விமலாவை கூப்பிடலாம்... ஆனா...அவுங்க இதை பாப்பாங்களானு தெரியலை...
2. ஜோவை கூப்பிடலாம்.. அதான் நான் ஆறு போடவே வரலையே...அப்பவே உனக்கு புரிய வேண்டாமானு கேப்பாரு.
3.காட்டாறு கூப்பிடலாம்... அவுங்களை வல்லி அம்மா கூப்பிட்டாங்க...
4 டெல்பின் மேடத்தை கூப்பிடலாம் அவுங்களையும் வல்லி அம்மா கூப்பிட்டாங்க...
5. மா.சிவகுமார் ..... அவரையும் கூப்பிட்டு இருப்பாங்க..
6. தங்கச்சி அவந்திகா....ம்ம்ம் ... மணிகண்டன் கூப்பிட்டாரு... தங்கச்சிக்கு பரிச்சை நேரம் போல....
7. 'அழகன்' செல்வேந்திரன்... அவர் பின்னுட்டத்தில மட்டும்தான் எட்டு போடுவேனு அடம் பிடிக்கிறாரு...
8.. போன முறை தமிழ் நதி என்னை மாட்டி விட்ட மாதிரி... இந்த முறை அவுங்களை... ஆனா... கவிதை தொகுக்கிறதில ரொம்ப வேலையோ? அந்த கவிதை தொகுப்பு எங்கு கிடைக்கும் கேக்கணும்.

ம்ம்ம்....இப்ப என்ன பண்ணலாம்...??

விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும

புரியாத புதிர்

சில வாரங்களுக்கு முன்னால், சில பள்ளிக் குழந்தைகள் (இந்திய) தேசியக் கொடியும், மெழுகுவர்த்தியும் வைத்துக்கொண்டு பிராத்தனை செய்தவாறு இருக்கும் புகைப்படத்தை செய்திதாளில் பார்த்த பொழுது.... சுனிதா வில்லியம்ஸ் சென்ற விண்கலம் நல்லபடியாக தரையிறங்க நடக்கும் பிராத்தனை. படித்தவுடன் 'நமக்கு என்னவாயிற்று?' என்றுதான் தோன்றியது. செய்திதாள்களும் வரிந்து கட்டிக்கொண்டு முதல் பக்க செய்தியாக வெளியிட்டது. காரணம்...அவருடைய பெற்றோர் இந்தியர் மற்றும் அவர் இந்திய வம்சவழியில் வந்தவர் என்பதாலும்!

சில வருடங்களுக்கு முன்னால், மனோஜ் சியாமளன் இயக்கிய திரைப்படம் சக்கைபோடு போட்டு ஆஸ்காருக்கு தேர்வாகியபோது, நம்மூர் பத்திரிக்கைகள் இந்திய வம்சவழியில் வந்தவர் என்ற ஒரே காரணத்தினால் அவரைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபொழுது கல்பனா சவ்லா பெயரில் விருது கொடுக்கப்பட்டபொழுதும் 'சாதனை பெண்' மட்டும் காரணமல்ல அவர் இந்திய வம்சவழியில் வந்தவர் என்பதே பெரியதாக இருந்தது.

இதுபோல் பாபி சிண்டால் [அமெரிக்கா மாநிலத்தின் முதல் இந்திய அமெரிக்க ஆளுநர்] மற்றும் நோரா ஜோன்ஸ் [கிராமி விருது சாதனையாளர்] இவர்களும் இந்த பட்டியலில் அடங்குவர்.

இவர்கள் பாராட்டுக்குறியவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இவர்களால் நமக்கும் நம் நாட்டுக்கும் பெருமை, 'Indian Idol' என்பதுபோல 'அதிகப்படுத்தி' காட்டுது புரியாத புதிராகவே இருக்கிறது. எப்படி இவர்களால் இந்தியாவுக்கு பெருமை..?!

சுனிதா வில்லியம்ஸ் தந்தை மட்டும்தான் இந்தியாவில் பிறந்தவர். சுனிதா வில்லியம்ஸ் பிறந்தது மற்றும் அவருடைய வாழ்க்கைமுறை அனைத்தும் அமெரிக்காவில்தான். எந்த வகையில் 'நமக்கு பெருமை'? விண்கலத்தில் சென்றபொழுது பகவத் கீதையும், சமோசாவும் எடுத்துச் சென்றதாலா?

அதேபோல் மனோஜ் சியாமளன். பிறந்தது புதுச்சேரியில். மற்றபடி அவருடைய வாழ்க்கைமுறை அனைத்தும் அமெரிக்காவில்தான். அவரிடம் " 'சின்ன தம்பி மாதிரி' படங்களை மேற்கோள்காட்டி இந்திய திரைபடங்களை பற்றிய உங்கள் கருத்துனென்ன? இந்திய திரைப்படங்களை இயக்கும் எண்ணம் உண்டா?"' என்ற பேட்டியில் ..... அவர் சொன்னது "என்னால் அப்படி ஒரு படத்தை இயக்குவது ரொம்ப கஷ்டமான விசயம்! இந்திய மக்களின் இரசனைக்கு ஏற்றவாறு என்னால் திரைப்படங்களை இயக்குவது இயலாததொன்று" .

சில வாரங்களுக்கு முன்னால் நம் நாட்டிற்காக... நமக்காக இறந்த ஜீனியர் கமிஷன் ஆபிசர் (JCO) - சுபேதார் லால் (Naib Subedar Chunni Lal) க்காக நாம் பிராத்தனை கூட்டம் நடத்தினோமா? இல்லை அப்படி ஒரு செய்தியை நான் கவனிக்க தவறிவிட்டேனா? அவருடைய பெயரில் ஏதேனும் விருது கொடுக்கும் எண்ணம் நம் அரசாங்கத்திற்கு உண்டா? ம்ம்.. அவர் அமெரிக்காவில் வளர்ந்து ஈராக் போருக்கு சென்று உயிர் துறந்திருந்தால்தான் நமக்கு பெரிய விசய்மாக இருந்திருக்குமோ?

சரி.... 'பெரிய தலைவர்கள்'தான் கேட்கவில்லை.. பெரிய கடவுளாவது கேட்கட்டும் என்று நம் இலங்கை சகோதர, சகோதரிகளுக்கு பள்ளிகளில் தினமும் பிராத்தனைகூட்டம் நடத்திருப்போமா?

மகேந்திரன் போன்ற இயக்குநர்களை நம்மால் ஏன் கொண்டாட முடிவதில்லை? MSV போன்ற கலை<>ர்களுக்கு ஒரு முறைகூட தேசிய விருது கிடைக்கவில்லையே? ஏன்?? வெளிநாட்டில் பிறக்காமல், இந்தியாவில் பிறந்த ஒரே காரணாத்தினாலா?

கன்னியாகுமாரியில் முதல் பெண் பேருந்து ஓட்டுநரை, ஜெயலலிதா ஊக்கப்படுத்தியிருந்தால் இன்று பல பெண்கள் அதில் ஆர்வம் காட்டிருப்பார்களே? ஏன் செய்யவில்லை?!

ம்ம்..வாழ்க்கையில் சில புதிர்கள் எப்பொழுதுமே புரிவதில்லை..!